வீட்டை விட்டு...

 அம்மாவின் உணவையும் திட்டையும் “மிஸ்” பண்றவங்களுக்கும், ஹாஸ்டலில் மட்டமான உணவை அனுதினமும் உண்டு அவஸ்தைப்படுவர்களுக்கும், சொந்த ஊரை விட்டு வேறு ஊர் சென்று படிப்பவர்களுக்கும், என் சக பள்ளித்தோழர்களுக்கும், மேலும், இன்னபிற ஜீவராசிகளுக்கும் இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.



     "டே, கண்ணு எந்திரிடா... மணி என்ன ஆகுது?" ; - என்ற பாசத்தோடு பள்ளியெழுப்பிவிடுவதும்,
     "சனியனே, எந்திரிச்சி தொல!" ; என்று அதைவிட அதீத பாசத்தோடு நம் துயிலையெழுப்புவதும்
     "அதான், பையன் தூங்கறான்ல, விடுங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்"; என்று நம் உள்ளமறிந்து உறங்கவிடுவதும்,

     காதாற கேட்டு சரியாக இரண்டாண்டுகளாகிறது...!

     இரண்டு வருடங்களுக்கு முன், காலையிலெழுந்தவுடன் பெட் காபி, அல்லது பெட் டீ. பின் சுடச்சுட இட்டிலியோ தோசையோ, வாரவிடுமுறையானால் பூரியோ பொங்கலோ அம்மாவின் கைவண்ணத்தில் டைனிங் டேபிளில் ஆவி பறக்க காத்துக்கொண்டிருக்கும். எண்ணிக்கையில் ஓரிரு தோசையோ, இட்டிலியோ குறைவாக உண்டுவிட்டால்....

     "ஏன்டா?" () "ஏன்டீ?" என்ன ஆச்சு உனக்கு?

     "போதும்மா"

     "என்னது? போ போ, உனக்கெல்லாம் அடுத்த வருஷம் காலேஜ் மெஸ்ல காய்ஞ்ச தோசையும், வேகாத இட்டிலியும் தின்னாதான் புத்திவரும்"
என்று, அடுத்த வருடத்தைப் பற்றி ஆரூடம் கூறும் அம்மாக்கள் இங்கே அநேகம். ஆனால் இன்றோ கல்லூரியில் சூப்பரான / சுமாரான / மட்டமான / மகாமட்டமான (நான்கில் உங்கள் ஹாஸ்டல் சாப்பாடு எப்படியோ, அதற்கேற்றவாறு படிக்கவும்) உணவை உண்கிறோமா இல்லையா என்று நம்மை விசாரிக்கக் கூட ஆளில்லை.

     பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை, சென்னையிலோ கோயம்பத்தூரிலோ, அல்லது வேறு எதாவது மாநகரில் போய் படிக்கவேண்டும் என்பதே பிரதான குறிக்கோளாக இருந்திருக்கவேண்டும். எனக்கும் அப்படித்தான் இருந்தது. உங்களுக்கும் அப்படியே என் நம்புகிறேன். கல்லூரிக்கு சேர்ந்த புதிதில், புதிய ஊர், புதிய மனிதர்கள், புதிய நண்பர்கள், ஹாஸ்டல் வாழ்க்கை என கிட்டத்தட்ட அனைத்துமே புதிதாக இருக்கும். புதுப்பொண்டாட்டி போல், முதல் ஓரிரு மாதங்களுக்கு ஜம்மென்று நல்ல அனுபவமாக இருப்பதால் வீட்டின் அருமை நமக்கு தெரியவோ அல்லது புரியவோ போவதில்லை. நாட்கள் செல்ல செல்ல நம்மில் பலருக்கு "ஒழுங்காக சொந்த ஊரிலே எதாவது ஒரு கல்லூரியில் டே ஸ்காலராக இருந்திருக்கலாமே" என நினைக்கத்தோன்றும்.

      சரி அதுபோகட்டும், ஹாஸ்டல் வாசிகளைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். சொந்த ஊருக்கு சற்று பக்கத்திலே கல்லூரி அமையப்பெற்றவர்களுக்கு பிரச்சினை இல்லை. மாதாமாதம் சென்று வருவார்கள். கொஞ்சம் தூரமாக இருந்தால் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ, செமஸ்டர் விடுமுறைக்கோதான் செல்லமுடியும். அவ்வாறு உங்கள் ஊர் தூரமாக இருந்தால் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் உண்டு! என்னதான் ஹாஸ்டல் மெஸ்ஸில் பத்து பதினைந்து நண்பர்களோடு இல்லாத சேட்டை செய்து சாப்பிட்டாலும், அம்மாவின் அன்பில் தயாரான உணவை, அவளின் திட்டோடு சேர்த்து சாப்பிடும் சுகமே தனி.

     என்றாவது ஒரு நாளாவது மெஸ்ஸில் போடும் தோசையோ சப்பாத்தியோ நன்றாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள், ஆனால் அன்றும் கேவலாமாக இருந்து, பிளாஷ்பேக்கில் உப்பு காரம் குறைவு என்று அம்மாவைத்திட்டி சாப்பிட்டது உங்கள் ஞாபகத்திற்கு வரும். அவ்வாறு என்றேனும் உங்களுக்கு ஞாபகத்திற்கு வீட்டு சாப்பாடின் அருமை தெரியவந்திருந்தால் மறுபடியும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைப் பதிவுசெய்துகொள்கிறேன்.


     ஆனால் ஒரு விஷயத்தை நினைத்து நீங்கள் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். இரண்டு மூன்று மாதம் கழித்து வீட்டிற்கு சென்றால் உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். அசைவம் என்றால் சிக்கனோ, மட்டனோ, மீனோ நாவில் எச்சில் ஊற உண்டுகளிக்கலாம். சைவம் என்றால், உங்களுக்கு பிடித்த ஐட்டம் எதுவோ அது அபரிவிதமாக கிடைக்கும். பாவம் புள்ள ரெண்டு மாசம் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கு, என்று ஏறத்தாழ அனைவருக்கும் ஏகபோக வரவேற்புதான்.
மேலும் இன்னொரு பிரச்சினையும் உண்டு, அடிக்கடி வீட்டிற்கு சென்றுவந்தால் மரியாதை அவ்வளவாக கிடைக்காது. புதுமாப்பிள்ளை மாமனார் வீட்டிற்கு சென்றுவருவதுபோல் "அப்பப்ப போய்வரவேண்டும்"



     இதில் மிகவும் பரிதாபத்துக்குரிய ஜீவராசிகள் யாரென்றால், ஆர்வக்கோளாரில் வெளியே ரூம் எடுத்து தங்கியவர்கள் தான். வெளியே தங்குபவர்களின் பலரின் வாழ்க்கை சோகத்தில் தான் உழல்கிறது. எனக்கு தெரிந்து வெளியே ரூம் எடுத்து தங்கியவர்கள் பலர் சாப்பாட்டை சாக்கு காட்டி ஹாஸ்டலை விட்டு வெளியேறியவர்கள். வெளியே ரூம் எடுத்து தங்கியவர்கள் முக்கால்வாசிபேர் "சோத்துக்கு செத்துப்போனவர்களாகதான்" காட்சியளிக்கின்றனர். பலர் ஃபேமிலி மேன்-ஆக ஆகிவிடுகின்றனர். சரியான போஷாக்கு கிடைக்கவில்லையோ என்னவோ? சென்றவாரம் வெளியே ரூம் எடுத்து தங்கிய நண்பன் சற்று சோகமாக காணப்பட்டான், என்னடா என்று அவனை விசாரித்ததில்,

      "இல்ல மாமா, தேதி ஒன்னாகிடுச்சி, கரண்டு பில்லு கட்டணும், போன மாசமே வாடக பாக்கி இருக்கு, இன்னும் ரெண்டு மூனு நாளுல கேஸ் சிலிண்டர் வேற தீந்து போய்டும்"
என்று சினிமாக்களில் வரும் மிடில் கிளாஸ் அம்மாக்களைப் போல பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்தான் அந்த ஃபேமிலி மேன். ஹாஸ்டலில் இருந்தால் உணவு சுவையாக இருக்கிறதோ இல்லையோ மணியடித்தால் சோறு என்பதுபோல் வேளாவேளைக்கு தின்ன எதாவது கிடைத்துவிடும், வெளியே ரூம் எடுத்தால் அது கொஞ்சம் கஷ்டம் தான் என்று அப்ரூவர் ஆனார் அந்த ஃபேமிலி மனிதர்.

      வெளியே ரூம் எடுத்து வெற்றி கண்டவர்களின் கதையும் உண்டு. வெளியே ரூம் எடுத்தால் தண்ணி, தம் என்று எதுவேண்டுமானாலும் எப்போதுவேண்டுமானாலும் அடிக்கலாம். அந்தமாதிரி பழக்கம் இல்லாதவர்களும் கூட வெளியே ரூம் எடுத்து சந்தோஷிகளாக உலா வருகின்றனர். அது சரி, அவரவருக்கு அவரவர் வாழும் இடமே சரியாகப்படும்.

      எங்கு தங்கினால் என்ன? சொந்த ஊரில் ஏறத்தாழ அனைவரும் ராஜாக்களைப் போல், ராணிகளைப் போல் வாழ்ந்திருப்பீர்கள். இப்போதும் அதே மாதிரி “ஜம்”மென்று வாழ்கிறீர்கள் என்றால் என் பாராட்டு நிச்சயம் உங்களுக்கு உண்டு. இல்லையென்றால் என் அனுதாபமும் உண்டு.

     வீட்டைவிட்டு வெளியூர் சென்று படிக்கும் நாம் இந்த இரண்டு வருடங்களில் வாழ்வின் அர்த்தத்தை புரிந்துகொண்டிருப்போம். ஞானம், போதனை, அறிவு, தெளிவு என அனைத்தும் கிடைக்கப்பெற்றோம். இனி நம் வாழ்க்கையை நோக்கி பயணிப்போம்.

     இக்கட்டுரையைப் படிக்கையில், எங்கேனும் உங்களுக்கு உங்கள் அம்மா/அப்பா ஞாபகம் வந்திருந்தால், சொந்த ஊர் ஞாபகம் வந்திருந்தால், அதுவே எனக்கு போதும்…