நீ ஏதேனும் பேச
முற்படுகையில் அவசர அவசரமாக
உன்னிதழில் இதழ்
பதிக்கும் ஆச்சர்யம் ஆசை.
உன் அதிகாலை தூக்கத்தில்
உன்னோடு பேச;
உனையறியாமல் நீ
உளறுவது ஆசை.
நெருக்கடியான சந்தையில்
ஒருநொடி உன்னைத் தொலைக்க;
உன் உருண்ட கண்ணின்
அவ்வொரு நொடி தவிப்பும் ஆசை.
எனையறியாமல் உன்னை
உரசி நிற்கும் அந்த நொடியில்
நீ விவரமறியாமல்
எனைப் பார்க்கும் பார்வையும் ஆசை.
எழுதிய கவிதையை
நீ படித்துவிட்டு எனை ஏறெடுத்து
பார்க்கும் அந்த
நொடி உன் கண்ணில் குதித்து செத்துவிட ஆசை.
இவ்வாசைகளை உன்
காதறுகே மெல்ல சொல்ல
நீ வாய்மூடி சிரிப்பதைக்
கண்டே உன் மடியில் உயிர் நீக்க ஆசை.