தூக்கில் தொங்கிய தோடு!

நகைக் கடையில்
கண்ணாடிப் பேழையினுள்
கர்வத்துடன் கேட்டது "ஒரு தோடு"

என்னை அணிய
எவளுக்கு உள்ளது பேறு?
யாரேனும் கூறு!

காண்பது ரோஜாப்பூவின்
மடல்களோ? காவிரித்தாயின்
வளைவுகளோ? மயில்தோகையின்
சுற்றல்களோ?

-குழம்பியது அது!

அவளின் காதின் சிவந்த
பவள வளைவுகளில் தன்
கர்வத்தைத் தொலைத்தது "அந்த தோடு"

தன் கர்வத்தைக் கொன்றவளைத்
தொட, அவளின் காதுமடல்களில்
தூக்குமாட்டிக்கொண்டது "அந்த தோடு".